சீகாழி – அப்பர் தேவாரம் (3):

<– சீகாழி

(1)
மாதியன்று மனைக்கிரு என்றக்கால்
நீதிதான் சொல நீயெனக்காரெனும்
சோதியார்தரு தோணிபுரவர்க்குத்
தாதியாவன் நான் என்னும்என் தையலே
(2)
நக்கம் வந்து பலியிடு என்றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணிபுரவர்க்குத்
தக்கதன்று தமது பெருமைக்கே
(3)
கெண்டை போல் நயனத்திமவான்மகள்
வண்டு வார்குழலாள் உடனாகவே
துண்ட வான்பிறைத் தோணிபுரவரைக்
கண்டு காமுறுகின்றனள் கன்னியே
(4)
பாலை யாழ்மொழியாள் அவள் தாழ்சடை
மேலளாவது கண்டனள், விண்ணுறச்
சோலையார் தரு தோணிபுரவர்க்குச்
சால நல்லள் ஆகின்றனள் தையலே
(5)
பண்ணின் நேர்மொழியாள் பலியிட்ட இப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ணமாடிய தோணிபுரத்துறை
அண்ணலாருக்குச் சால அழகிதே
(6)
முல்லை வெண்நகை மொய்குழலாய், உனக்கு
அல்லன் ஆவதறிந்திலை நீ, கனித்
தொல்லையார் பொழில் தோணிபுரவர்க்கே
நல்லையாய் இடுகின்றனை நங்கையே
(7)
ஒன்று தான் அறியார் உலகத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணிபுரவர் தம்
கொன்றை சூடுங் குறிப்பது ஆகுமே
(8)
உறவு பேய்க்கணம், உண்பது வெண்தலை
உறைவதீமம், உடலிலோர் பெண்கொடி
துறைகளார் கடல் தோணிபுரத்துறை
இறைவனார்க்கிவள் என் கண்டன்பாவதே
(9)
மாக யானை மருப்பேர் முலையினர்
போக, யானும் அவள் புக்கதே புகத்
தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே
ஆக யானும் அவர்க்கினி ஆளதே
(10)
இட்டமாயின செய்வாள்என் பெண்கொடி
கட்டம் பேசிய காரரக்கன் தனைத்
துட்டடக்கிய தோணிபுரத்துறை
அட்ட மூர்த்திக்கன்பதாகியே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page